Showing posts with label Divine Stories. Show all posts
Showing posts with label Divine Stories. Show all posts

Wednesday, April 23, 2025

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர்.

தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும்.

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குபவர். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள்.

சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர்.

இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான். உலகின் அத்தனைச் செல்வங்களும் குபேரனிடம் வந்த காரணம் என்ன... நேர்மையானவரிடம் தானே நிதிப்பொறுப்பை கொடுப்பார்கள்...

சிவபெருமானே குபேரனை செல்வத்தின் அதிபதியாக நியமித்த காரணம் என்ன...

அந்த கதையைத்தான் நாம் இங்கே காண இருக்கிறோம்.
நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். 

 


 



இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன் ஆண்டு வந்தார்.

ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக்கொண்டான்.
நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடுதோறும் அலைந்துகொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள்.

அதன்படி பெண் தேடவும் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை.
பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார்.

சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம்தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
நாளடைவில், பல தலங்களில் தங்கியிருந்து தவம் இயற்றவும் செய்தார்.

இப்படி ஊர் ஊராகச் சுற்றிவரும் வேளையில், இறுதியாக காசி மாநகருக்கு வந்து சேர்ந்தார் வைஸ்ரவணன்.
 அந்த நகரின் அமைதியையும் பெருமையையும் கண்ட அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா... `அகில உலகத்துக்கும் நாயகன்’ எனப் பெயர் கொண்ட விஸ்வநாதரைக் கண்டதும் தனது வாழ்வின் அர்த்தமே விஸ்வநாதரை துதிப்பதுதான் என எண்ணிக்கொண்டார்.

பெண் தேடி வந்த நோக்கத்தைக்கூட மறந்து, சிவ தியானத்தில் மூழ்கிவிட்டார். ஒன்றா இரண்டா... எண்ணூறு ஆண்டுகளைக் கடந்த தவம் என்கிறது புராணம்.

அத்தனை ஆண்டுகளாக, எந்த நோக்கமும் இன்றி, பல இடையூறுகளைத் தாண்டி வைஸ்ரவணனின் தவம் தொடர்ந்தது. எதற்காகத் தவம் செய்கிறார் என்ற காரணமே தெரியாமல் தேவர்களும் குழம்பினர்.

ஆனாலும், அவருக்கு இடையூறு எதுவும் செய்யாமல்விட்டுவிட்டனர். காலம் செல்லச் செல்ல அவரின் தவத்தின் பயனாக எழுந்த அக்னிச் சூடு கயிலாயத்தையும் தொட்டது.

பரம்பொருளான ஈசன், இனியும் தாமதிக்கக் கூடாது என வைஸ்ரவணனுக்கு அருள்புரியக் கிளம்பினார்.
அப்போது அன்னை உமாதேவி, தானும் அந்த எளிய பக்தனை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவசியைக் காண விரும்புகிறேன் என்று கூறி சிவனோடு கிளம்பினார்.

கடும் தவம் இயற்றிய வைஸ்ரவணன் முன்பு தோன்றிய சிவனும் பார்வதியும் அவரை அன்பு கனிய அழைத்தனர். அம்மையப்பரின் குரல் கேட்டு தவத்தில் இருந்து விடுபட்டார்.
இழந்து போன இலங்கைக்கு பதிலாக அவருக்கு அழகாபுரி பட்டணத்தையே சிவன் உருவாக்கித் தந்தார்.


உலகத்து நிதிகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை `குபேரன்’ என்ற பெயரோடு விளங்கச் செய்தார். வடக்கு திசைக்கு அவரை அதிபதியாக்கி, அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக்கினார்.

செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக குபேரனை நியமித்தார் சிவன்.
சித்திரரேகை எனும் மங்கையை மணமுடித்துத் தந்து அவரை ஆசீர்வதித்தார்.
சிவபெருமானுக்குப் பிரியமான நண்பனாக குபேரன் மாறினார். இதனால் `சிவசகா’ என்ற பெயரையும் கொண்டார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலகத்து நிதிகளை எல்லாம் குபேரன் பெற்றார். தனக்கென ஒன்றையுமே எதிர்பாராத குபேரனின் தியாகச் செயலைப் போற்றியே அவர் தேவருலகின் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெற்றார். அது மட்டுமா?

காக்கும் கடவுளான திருமாலின் அம்சமான வெங்கடாசலபதிக்கே கடனும் கொடுத்தார் குபேரன்.

எனவே, நியாயமான நேர்மையான எவருக்கும் நிச்சயம் உயரிய பொறுப்புகள் வந்தே தீரும். காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், கட்டாயம் தன்னலம் கருதாத பண்பாளர்களுக்கு சிறப்புகள் வந்தே சேரும் என்பதையே குபேரனின் கதை நமக்கு
உணர்த்துகிறது.

Tuesday, April 30, 2024

பிறவிப்பெரும் பேறு

பிறவிப்பெரும் பேறு☝🏻👇🏻

ஒரு சமயம் பாண்டிய மன்னன் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றான்.

ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே தாங்கள் யார்.?" என வினவினான்.

நான் புனித கங்கையில் நீராடி விட்டு, சேதுக் கரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர். 




"ஓ...அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ஸ்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன்.

முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார்.

"மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ ,மற்ற எட்டு மாதத்திலும்  உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும், முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர் .

அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விஷயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே, அரண்மனைக்குச் சென்றான்.

மறுநாள் குலகுரு செல்வ நம்பியையும், பண்டிதப் பெரு மக்கள் பலரையும் அழைத்து , இது குறித்து விசாரித்த போது யாரும், மன்னனின் சந்தேகத்தைப் போக்க இயல வில்லை.

மன்னன் ஒரு மூங்கிலின் உச்சியில் ஒரு பொற்காசு முடிப்பைக் கட்டி ,அரண்மனை வாசலில் நடுமாறும், மன்னனின் சந்தேகத்தை தெளிவுறச் செய்வோர்களுக்கு இந்தப் பொற் காசுகள் அடங்கிய முடிச்சு இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தான்.

அன்றைய இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் 


 

 


 

பெரியாழ்வார்  கனவில் பெருமாள் தோன்றி," பரம் பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை," என்று சொல்லி மன்னன்  சந்தேகம் போக்கும் படி கூறி மறைந்தார்.

பெரியாழ்வாரும் அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, " மன்னா,! நாராயணனே பரம்பொருள், இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலே அடுத்த பிறவிக்கான தேடல்  ஆகும்," என்று சொல்லி முடிக்கும் தறு வாயில் மூங்கில் மரம்வளைந்து தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது.

மன்னனும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான். அதே நேரத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார்.

அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டு எனத் தொடங்கும் பாசுரம் பாடினார்.

 ஓம் நமோ நாராயணாய " என்ற மந்திரம் சொல்லி வழி பட்டால் பல்லாண்டு நலமுடன் வாழலாம். இதுவே பிறவியில் கிட்டும் பெரும் பேறு -
கோவிந்தா ஹரி கோவிந்தா !
நாராயண நாராயண


செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...